CricketArchive

வீரேந்திர ஷேவாக்
by CricketArchive


Player:V Sehwag

DateLine: 18th August 2008

 

முழுப்பெயர்: வீரேந்திர ஷேவாக்

 

பிறப்பு: 20 அக்டோபர் 1978, டெல்லி, இந்தியா

 

மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர்

 

பந்து வீச்சு முறை: வலதுகை சுழற்பந்து வீச்சாளர், வலப்புறம் சுழன்று திரும்பும் படியான சுழல் வீச்சு

 

அணியில் வீரரின் நிலை: பேட்ஸ்மேன்

 

விளையாடிய அணிகள்: இந்தியா, ஆசியா லெவன், தில்லி, டெல்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் லெவன், இந்தியா ப்ளூ, லீ ஸெஸ்டர் ஷையர், உலக லெவன்.

 

அறிமுகம்:

 

டெஸ்ட் போட்டி: நவம்பர் 3-6, 2001, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ப்ளோம்போன்டையினில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.
ஒருதினப் போட்டி: ஏப்ரல் 1, 1999 அன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே மொஹாலியில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: டிசம்பர் 1, 2006 அன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி

 

தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் தெண்டுல்கரின் மற்றெரு பிரதி என்று சொல்லும் அளவிற்கு பிரபலமான துவக்க ஆட்டக்காரர். இவரது ஒரு சில ஆட்ட முறைகள் சச்சினைப் போன்று இருக்கும். இவரது முன்மாதிரி வீரர் சச்சின் தெண்டுல்கர் ஆவார்.

 

தானிய வியாபாரியின் மகனாகப் பிறந்தவர் ஷேவாக். இவரது தந்தையின் பெயர் கிருஷ்ணன், தாயின் பெயர் கிருஷ்ணா ஷேவாக். இத்தம்பதியினருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் இவர் மூன்றாவது பிள்ளை ஆவார். இவருக்கு மஞ்சு, அஞ்சு என இரண்டு மூத்த சகோதரிகள். இவரது இளைய சகோதரன் பெயர் வினோத்.

 

இவர் சிறு வயதில் பொம்மை பேட்டை வைத்து கிரிக்கெட் விளையாடியதைப் பார்த்த இவரது தந்தை, கிரிக்கெட் மேல் ஷேவாக்கிற்கு இருக்கும் ஆர்வத்தை கண்டுபிடித்தார்.

 

இவரை அரோரா வித்யா பள்ளியில் சேர்த்து விட்டார். அந்த பள்ளியின் கிரிக்கெட் மைதானத்திலேயேதான் ஷேவாக் இருப்பார். இதைக் கண்ட அவரது தாய் எப்போதும் கிரிக்கெட் கிரிக்கெட் என்று இருக்காதே. கொஞ்சநேரம் படிக்கவும் செய்யப்பா என்றாராம். இவரது ஆர்வத்தைக் கண்ட அந்த பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர் ஏ.என்.சர்மா அவருக்கு தேவையான ஆட்ட நுணுக்கங்களையும், பயிற்சிகளையும் கற்றுத் தந்தார். அதன் விளைவு, 1997-98 இல் தில்லி அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 19998-99 இல் துலீப் கோப்பைக்கான வடக்கு மண்டல அணியில் தேர்வு செய்யப்பட்டார். அப்போட்டிகளில் இவர் மிகச் சிறப்பாக விளையாட, தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் ஷேவாக் இடம்பிடித்தார்.

 

பின்னர் 1999ஆம் ஆண்டு மொஹாலியில், பாகிஸ்தானுக்கு எதிரான நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் அப்போட்டியில் அவர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் ஆடிய 4 வது ஒரு தினப் போட்டி பெங்களூரில், ஆஸ்திரேலிய அணிக்காக எதிராக நடைபெற்றது. அதில் இவர் 54 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். மேலும், அப்போட்டியில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, இந்திய அணியை வெற்றி பெற வைத்து அப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

 

2001-இல் கென்யாவிற்கு எதிரான போட்டியில் குறைந்த (22)பந்துகளில் அரை சதம் அடித்த இந்திய வீரர்களில் இரண்டாவது இடத்தை திராவிட், கபில்தேவ், யுவராஜ்சிங்குடன் பகிர்ந்து கொண்டார்.

 

2001- ஆகஸ்டில் இலங்கை, நியூசிலாந்து அணிகள் கலந்து கெண்ட முத்தரப்பு தொடரில் சச்சின் தெண்டுல்கர் காயமடைந்ததால் அவருக்குப் பதிலாக, சவுரவ் கங்குலியுடன் துவக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். அத்தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் 69 பந்துகளில் அதிரடியாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்தின் மூலம் இந்திய வீரர்களில் குறைந்த பந்துகளில் சதம் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது வீரராக இடம் பிடித்தார். (முதல் இடத்தில் முகமது அசாருதின் 62 பந்துகளில் சதமடித்துள்ளார்.)

 

அதன் பிறகு தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் நிலையானதொரு ஆட்டத்தைப் பிடித்தார். மேலும், தனது திறமையால் நடுவரிசை ஆட்டக்காரராக இருந்து துவக்க ஆட்டக்காரராக மாறினார். ஒருதினப் போட்டிகளில் இவரது அதிரடி ஆட்டம் எதிரணிக்கு சிம்ம சொப்பனம்.

 

டெஸ்ட் போட்டியில் இவர் முதன்முதலாக 2001- இல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக களமிறக்கப்பட்டார். அவர் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்தார்.

 

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக பட்சரன்னை (319 ரன்கள்) எடுத்தவர். டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் ஒரே இன்னிங்ஸில் மூன்றுசதங்களை (278 பந்துகளில் 300 ரன்கள்) எடுத்தவர். இந்திய வீரர்களில் ஒரே இன்னிங்ஸில் மூன்றுசதங்களை அடித்த முதல் வீரர், சர்வதேச அளவில் இரண்டு முறை மூன்று சதங்களை அடித்தவர்களின் வரிசையில், டான் பிராட்மேன், பிரையன் லாரா, ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது நபர் என பல சாதனைகளை புரிந்துள்ளார்.

 

பேட்டிங் மட்டுமல்ல சுழற்பந்து வீச்சிலும் வல்லவர். அணியில் நெருக்கடியான தருணங்களில் அற்புதமாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஏப்ரல், மே, ஜூன், 2008-ல் நடத்தப்பட்ட , 20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டு கிரிக்கெட் போட்டி (Indian Premier League) தொடரில்டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் கேப்டனாக தலைமையேற்று அரை இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்திச் சென்றார். இவரது அதிரடி ஆட்டத்தால் அந்த அணி அரையிறுதிப் போட்டி வரை முன்னேற வழிவகுத்தது. இப்போட்டித் தொடரில் 3 அரைசதங்கள் உள்பட 404 ரன்கள் குவித்து அசத்தினார்.

 

அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்த அணியில் இடம்பிடித்து விளையாடினார். இரு அணிகளுக்கும் இடையே காலேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின், முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 201 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

 

இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் கண்ட முதல் வீரர் என்ற பெருமையையும், அதிக ரன்கள் அடித்தவர் வரிசையில் 201 ரன்களுடன் முதலிடத்தையும் ஷேவாக் பிடித்தார்.

 

துவக்க வீரராக களமிறங்கிய ஷேவாக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் டெஸ்டில் இச்சாதனை படைத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக 1983-ல் நடந்த, பாகிஸ்தானுக்கு எதிரான பைசலாபாத் டெஸ்டில், துவக்க வீரராக வந்த கவாஸ்கர் 127 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

டெஸ்ட் அரங்கில் 5வது முறையாக இரட்டைசதம் கடந்த ஷேவாக், டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டைசதம் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை திராவிட்டுடன் பகிர்ந்து கொண்டார். சச்சின், கவாஸ்கர் தலா 4 இரட்டைசதம் கடந்துள்ளனர். இத்தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 இரட்டைச்சதம், 1 அரைசதம் உள்பட 344 ரன்கள் குவித்தார்.

 

இவரது அதிரடியால் உலகெங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். இவர் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்.

 

கடைசியாக திருத்தப்பட்ட தேதி: 18.09.08

LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2025 CricketArchive