| Scorecard: | Sri Lanka v India |
| Event: | India in Sri Lanka 2008 |
DateLine: 24th July 2008
வணக்கம்.
 
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 422 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியினரின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது. இன்று மட்டும் மூன்று இலங்கை வீரர்கள் சதமடித்தனர். 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 
இந்த அரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று கொழும்புவில் துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்திருந்தது. வர்ணபுரா 50 ரன்களுடனும், இவருக்கு ஒத்துழைப்பு தந்த மஹேல ஜெயவர்தனே 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
இதையடுத்து இன்று காலை இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்தது. அரைசதம் கடந்திருந்த வர்ணபுரா மேலும் 5 ரன்கள் சேர்த்திருந்தபோது ஜாகீர்கான் வீசிய பந்தை, அவரிடமே திருப்பி அடித்தார். அதே வேகத்தில் ஜாகீர்கானும் பிடித்தார். ஆனால் அது நோபால் என நடுவர் அறிவித்துவிட்டார். 
இதையடுத்து, வர்ணபுரா 86 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்பஜன்சிங் வீசிய பந்தை தனது காலில் வாங்கினார். இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ முறையில் வர்ணபுரா ஆட்டமிழந்ததாக அறிவிக்கும்படி களநடுவரிடம் முறையிட்டனர். அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே களநடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென முறையிட்டார். 
இதை ஆய்வு செய்த மூன்றாவது நடுவரும் களநடுவர் கொடுத்த தீர்ப்பு சரியென மறுதீர்ப்பளித்தார். இந்திய தரப்பில் இருந்த மூன்று வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பு வீணானது. 
இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். அவர் 55 ரன்கள் எடுத்திருந்தபோது அனில் கும்ப்ளே வீசிய பந்தை விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பக்கம் தட்டிவிட, அப்பிடியை தினேஷ் கார்த்திக் தவறவிட்டார். இதனால் அவர் தப்பித்தார். இது இந்திய அணிக்கு வினையானது. 
சிறப்பாக ஆடிவந்த இலங்கை அணியின் துவக்க வீரரான வர்ணபுரா 163 பந்துகளில் 13 பவுண்டரிகள் உள்பட தனது 2-வது சதத்தைக் (இந்தியாவிற்கு எதிராக முதல் சதம்) கடந்தார். மேலும் இவர் 15 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் ராகுல் திராவிட்டிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய எண்ணிக்கை 115 ஆகும். 
இதையடுத்து மஹேல ஜெயவர்தனேவுடன், திலன் சமரவீரா ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய மஹேல ஜெயவர்தனே 207 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகள் உள்பட தனது 23-வது சதத்தைக் (இந்தியாவிற்கு எதிராக ஐந்தாவது சதம்) கடந்தார். கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய ஜெயவர்தனே 136 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் பிடி கொடுத்து வெளியேறினார். 
இவரையடுத்து திலன் சமரவீராவுடன், திலகரத்னே தில்ஷான் ஜோடி சேர்ந்தார். இவர் 1 ரன் எடுத்திருந்தபோது ஜாகீர்கான் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் பிடி கொடுத்தார். அதை நடுவரும் உறுதி செய்தார். 
ஆனால் இம்முறை களநடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென திலகரத்னே தில்ஷான் முறையிட்டார். இதை ஆய்வு செய்த மூன்றாவது நடுவரோ களநடுவர் கொடுத்த தீர்ப்பு தவறென மறுதீர்ப்பளித்தார். இலங்கை தரப்பில் இருந்த மூன்று வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பு முடிந்தது. ஆனால் டிவி ரீப்ளேயில் அவர் ஆட்டமிழந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. 
திலன் சமரவீராவும் தன்பங்கிற்கு இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தார். இஷாந்த் சர்மா வீசிய 109 ஓவரில் தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசினார். அடுத்த சில நிமிடங்களில் தனது ஏழாவது சதத்தை (இந்தியாவிற்கு எதிராக மூன்றாவது சதம்) கடந்தார். அவர் 174 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் சதம் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
இரண்டாம் நாள் ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்கள் இருந்தது. அப்போது திலகரத்னே தில்ஷான் ஹர்பஜன்சிங் வீசிய பந்தை தனது காலில் வாங்கினார். இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ முறையில் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கும்படி களநடுவரிடம் முறையிட்டனர். அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் அனில் கும்ப்ளே களநடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென முறையிட்டார். 
இதை ஆய்வு செய்த மூன்றாவது நடுவரும் களநடுவர் கொடுத்த தீர்ப்பு சரியென மறுதீர்ப்பளித்தார். இந்திய தரப்பில் இருந்த மூன்று வாய்ப்புகளில் இரண்டாவது வாய்ப்பும் வீணானது. 
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 422 ரன்கள் எடுத்துள்ளது. 
திலன் சமரவீரா 111 ரன்களுடனும், திலகரத்னே தில்ஷான் 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதம் உள்ளது. 
நன்றி, வணக்கம் 
LATEST SCORES
CURRENT EVENTS
- Australia in Pakistan 2025/26
- Denmark Women in Oman 2025/26
- England in Sri Lanka 2025/26
- ICC Men's T20 World Cup 2025/26
- ICC Women's T20 World Cup Qualifier 2025/26
- India Women in Australia 2025/26
- Ireland in United Arab Emirates 2025/26
- New Zealand in India 2025/26
- Pakistan Women in South Africa 2025/26
- West Indies in South Africa 2025/26
- Women's Asia Cup Rising Stars 2025/26
View all Current Events CLICK HERE


